Thursday, February 26, 2009

தமிழீழ வழிபாடு: குருகாவூர் வெள்ளடை பதிகம்

முப்பொழுதும் திருமேனி தீண்டும் உரிமைபெற்ற
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய அவர் நண்பர் சிவனாரைச்
சிந்திப்பாம். எல்லாமும் சித்திக்குமே!

பதிகம்: [7:29]
தலம்: திருக் குருகாவூர்வெள்ளடை
பண்: நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

*1
இத்தனைஆம்ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!
பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர்எல்லாம்
முத்தினை, மணிதன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த
வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே;

*2
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;
வாவியில் கயல் பாய, குளத்துஇடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*3
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு நன் கலன்ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு நல் இடம்ஆகக் கடுஇருள் நடம்ஆடும்
வேடனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*4
வெப்பொடு பிணிஎல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்;
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை,
அப்படி அழகுஆய அணி நடை மடஅன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*5
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்;
சுரும்பு உடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண்நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*6
பண்இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்!
கண்இடை மணி ஒப்பாய்! கடுஇருள் சுடர் ஒப்பாய்!-
மண்இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண்இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*7
போந்தனை; தரியாமே நமன்தமர் புகுந்து, என்னை
நோந்தன செய்தாலும், நுன்அலது அறியேன், நான்;
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*8
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்துஇடை மால் தீர்ப்பாய்;
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார்தமர் என்னைக்
கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே,
விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*9
படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே;
தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே!
கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன்அடிக்கே
விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே!

*10
வளம் கனி பொழில் மல்கு லயல் அணிந்து அழகுஆய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை,
இளங் கிளை ஆரூரன்-வனப்பகைஅவள்அப்பன்-
உளம் குளிர் தமிழ்மாலை பத்தர்கட்கு உரை ஆமே.

திருச்சிற்றம்பலம்


நன்றி: நா.கணேசன், பிரவாகம் மடற்குழு

Monday, February 23, 2009

தமிழீழ வழிபாடு - மகாசிவராத்திரி

தமிழீழ வழிபாடு - மகாசிவராத்திரி


திருச்சிற்றம்பலம்

விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

முருகன் வணக்கம்

ஆறுமுகம் வாழி ஆறிரண்டு தோள் வாழி
தேறுபதம் வாழி இரு தேவிமார் வீறு புடை வாழி
வேல் வாழி மயில் வாழி போரூரர் வாழி
செகம் வாழி மகிழ்ந்து!

அம்மை வணக்கம்

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே!

நால்வர் போற்றி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்
...கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கன்மிதப்பில்
...அணைந்தபிரான் அடி போற்றி!
வாழி திருநாவலூர் வன்தொண்டர்
...பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் தம்
...திருத்தாள் போற்றி!

சிவ வழிபாடு!

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில் சூழ்
..பெருந்துறையாய் அடியேன் நான்
உடையானே உனையல்லாதுறு
..துணை மற்றிலேனே!

போற்றி ஓ(ம்) நமசிவாய புயங்கனே மயங்குகின்றேன்!
போற்றி ஓ(ம்) நமசிவாய புகலிடம் பிறிதொன்றும் இல்லை!
போற்றி ஓ(ம்) நமசிவாய புறம் எனை போக்கல் கண்டாய்!
போற்றி ஓ(ம்) நமசிவாய செய செய போற்றி போற்றி!

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயு நின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின்றதுள்ளம்
ஆய மாய காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே!

ஈழ நிலை சொல்லி வேண்டல்!

திருமுறைத் தலைவா திருமுறை தொழுதத்
...திருத்தமிழ்க் குமுகம் திகைத்தது கண்டீர்!
பெருந்துறைப் பெரியாய் பெருவினை திரண்டு
...பொருதிடக் குடியும் புலம்புதல் கண்டீர்!
குருதியும் புனலாய் தரணியில் அலைய
...குறுகுது குலமும் குழைகிறம் நித்தல்!
திருநடம் புரிவோய் திருவிழி திறந்தெம்
...தமிழ்நிலம் எழுக! அடைக்கலம் நின்தாள்!

அடைக்கலம் நின்தாள் அடைக்கலம் அடைக்கலம்
...ஆலவாய் அரசே அடைக்கலம் அடைக்கலம்
கடைநிலம் நின்றே கலங்கினம் வழியிலை
...கோடிய சிங்களர் செயுங்கொலை கணக்கிலை
கொடைபல தந்தே மலைமலை கொலைசெய
...காதகர் திரண்டு களிப்பதென் தெரியிலை
படைக்கலன் எந்தாய் நினதருள் பிறிதிலை
...அடைக்கலம் அடைக்கலம் படைக்கலன் உடனளி!

உமையொடு உனையே தொழுத எம்கரங்கள்
துவண்டின்றுத் தோற்றிடலாமோ?

அமைவுற்றப் புவியை அழிக்கும் எம்பகைவர்
அடுத்தவர் கூடி ஆண்டிடலாமோ?

இமைக்கவும் இயலா வெறித்த எம்விழிகள்
இனமுழு இழவைக் காண்டிடலாமோ?

எமைப்பெற்ற இறைவா எமக்கிந்த துயரெனின்
துடைப்பதும் உனது தொழிலல்லவோ?

ஈழமே எமதுயிர் எழுந்தெமக்(கு) அருள்வாய்!
ஈழமே எமதுயிர் எந்தீவினைவேர் அறுப்பாய்!
ஈழமே எமதுயிர் எம்சாவினைத் தடுப்பாய்!
ஈழமே எமதுயிர் எம்உறவினைக் காப்பாய்!
ஈழமே எமதுயிர் பெரும்பகைக் களைவாய்!

ஈழமே எமதுயிர் தனித்தெமக்(கு) அளிப்பாய்!
ஈழமே எமதுயிர் இனிதெமக்(கு) அளிப்பாய்!
ஈழமே எமதுயிர் மகிழ்ந்தெமக்(கு) அளிப்பாய்!
ஈழமே எமதுயிர் விரைந்தெமக்(கு) அளிப்பாய்!


=============================================

இறைவனை உருகிப் போற்றுதல்!

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
ஆண்ட நீயிலை ஆனால்?

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
பாரொடு விண்ணாய்ப் பரந்தபரனே!

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
பற்று மற்றிலேன் கண்டாய்!

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே!

பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
...திருமிடற்றடிக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
...காலெடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்!
உலகடங்கலும் படைத்து உடையவன் தலைபறித்து
...இடக்கையில் அடக்கிய இறைவ நின் அடைக்கலம்!
செய்ய பொன்னம்பலச் செல்வ நின் அடைக்கலம்
...ஐய நின் அடைக்கலம்! அடிய நின் அடைக்கலம்!

(அடைக்கலம் நின் அடைக்கலம்)


ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்!


வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!

வாழி ஆதன்! வாழி அவினி
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக !

வாழி ஆதன்! வாழி அவினி
பசி இல் ஆகுக! பிணி சேண் நீங்குக!

வாழி ஆதன்! வாழி அவினி
நன்று நனி சிறக்க! தீதுஇல் ஆகுக!

=======

ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி

தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களங்கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி

கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்றி போற்றி சயசய போற்றி!!!

திருச்சிற்றம்பலம்


( திருமந்திரம், தேவாரம், திருவாசகம்,
அபிராமி அந்தாதி, பட்டினத்தார் பாட்டு,
சிலப்பதிகாரம், ஐங்குறுநூறு,
நால்வர் மணிமாலை மற்றும்
தமிழர் ஒருவரின் பாடல்வரிகளோடு,
தமிழ் வழிபாடு)


ஒரு சில பொருள் மட்டும் இங்கே:

ஆதன் = தமிழ் மக்களைக் காக்கும் தலைவன்
அவினி = அவனை வாழ்த்தித் துணை நிற்கும் சான்றோர்

வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!"

( தலைவனைச் சூழும் பகை நீங்குக! அவன்வாழும் யாண்டுகள் பல வளர்க)

"வாழி ஆதன்! வாழி அவினி"
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக

(பகைவர் புல் அருந்துக! சான்றோர் பாராட்டுக)

"வாழி ஆதன்! வாழி அவினி"
பசி இல் ஆகுக! பிணி சேண் நீங்குக!

(ஈழத்து மக்களை வாட்டும் பசி இல்லை ஆகுக!
அவர்களிடமிருந்து நோய்கள் தொலைவுக்கு நீங்குக.
அந்தப் பிணிகள் போய் தமிழரை வருத்தும்
சிங்களவெறியரை அடைக ))

"வாழி ஆதன்! வாழி அவினி"
நன்று நனி சிறக்க! தீதுஇல் ஆகுக!

(நன்மை மிகவும் பெருகுக! தீமை இல்லை ஆகுக)

தமிழீழத் துயரை தமிழினத்தின் கோயில்களுக்கு எடுத்துச் செல்வோம்!

தமிழீழத் துயரை
தமிழினத்தின் கோயில்கள் யாவற்றுக்கும்
எடுத்துச் செல்வோம்!

அனைத்து மக்களும் உளம் உருகி
வேண்டட்டும்!

தமிழ்நாட்டின் தீமைகள் விலகட்டும்!
தமிழீழத்தின் துயர் விலகட்டும்!

தமிழின மக்களின் உணர்ச்சி பெருகட்டும்!

தமிழீழ இன்னல் களைய வழிபடுவோம்!

அனைவரும் வாரீர்!
நமது உறவுகளின் துயர் தீர்க்க ஆண்டவனை வேண்டுவோம்!